ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்


ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்
x

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பாக நாகர்கோவிலில் முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பாக நாகர்கோவிலில் முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆள்சேர்ப்பு முகாம்

மத்திய அரசின் திட்டமான அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 21-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. முகாமை திருச்சியில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு மையம் நடத்த உள்ளது.

நாகர்கோவிலில் நடைபெறும் முகாமில் குமரி உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

33 ஆயிரம் பேர் விண்ணப்பம்

இந்தநிலையில் இந்த ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். ராணுவ ஆள்சேர்ப்பு மைய திருச்சி மண்டல இயக்குனர் திலீப்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவிலில் நடைபெற உள்ள அக்னிபத் திட்டத்துக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க 17 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேரை அழைத்து தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் 120 ராணுவ பணியாளர்கள் கலந்து கொண்டு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதற்காக அவர்கள் வருகிற 19-ந் தேதி நாகர்கோவில் வந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடிப்படை வசதிகள்

கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் பேசுகையில், முகாம் நடைபெறும் விளையாட்டு அரங்கில் மருத்துவக்குழு, தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். முகாமில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட உள்ளது. போக்குவரத்து வசதிக்காக அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், ராணுவ அதிகாரிகள், பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story