பல்வேறு திட்டப்பணிகள் தங்களுக்கு தெரியாமல் நடப்பதாக புகார்:தர்மபுரி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்


பல்வேறு திட்டப்பணிகள் தங்களுக்கு தெரியாமல் நடப்பதாக புகார்:தர்மபுரி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x

பல்வேறு திட்டப்பணிகள் தங்களுக்கு தெரியாமல் நடப்பதாக புகார் தெரிவித்து தர்மபுரி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

தர்மபுரி

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மரியம் ரெஜினா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட ஊராட்சி மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 824 மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 84 பணிகளுக்கும், 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ரூ.83 லட்சத்து 54 ஆயிரத்து 215 மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 63 பணிகளுக்கும் என மொத்தம் ரூ.3 கோடியே 87 லட்சத்து 29 ஆயிரத்து 39 மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 147 திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வாக்குவாதம்

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பேசும் போது,' மத்திய, மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே நடந்துள்ளது. இதனால் எங்களுக்கு கிராமத்தில் என்ன மதிப்பு இருக்கும். இந்த திட்டங்களின் கீழ் எந்தெந்த ஒப்பந்ததாரர்கள் எந்தெந்த பணிகளை மேற்கொண்டனர் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்து வரும் நிதியை பொறுத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கும் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் கூட்டத்தில் உறுதி தெரிவித்தனர்.

தொப்பையாறு அணை-பொம்மிடி சாலை மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. மாவட்ட கவுன்சிலர் குமார் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட ஊராட்சி செயலாளர் கூறினார்.


Next Story