மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்


மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்
x

மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள். பெருமழைக் காலங்களிலும், கடும் புயல் காலங்களிலும், மின் தடையை உடனுக்குடனே சரி செய்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்கிறவர்கள் மின்துறை ஊழியர்கள்.

ஆனால், அந்த தன்னலமற்ற மின்துறை ஊழியர்களுக்கு, தி.மு.க. அரசு கொடுக்கும் பரிசு பாதுகாப்பற்ற பணிச்சூழல். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மின் துறை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மின்சார விபத்தில் மரணமடைந்த மின் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆளுங்கட்சிக்கோ, அமைச்சருக்கோ, மின் துறை ஊழியர்களை பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லை. ஆனால், அவர்கள் பற்றி பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டு வருவதும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறேன்.

துயரமான சம்பவங்கள்

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் கடந்த சில மாதங்களில், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மின் வாரிய வயர்மேன் குமணன், பெருந்துறை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாகை மாவட்ட மின் ஊழியர் சிவசங்கரன், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த மின் ஊழியர் வெங்கடேசன், காஞ்சீபுரம் வெள்ளைகேட் பகுதி மின் ஊழியர் பக்கிரிசாமி, ஜோலார்பேட்டை மின் ஊழியர் முருகன் என மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாது, மேலும் பல மின் ஊழியர்களும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரமான சம்பவங்கள் எல்லாம், ஒரு நாள் செய்தியாகவே கடந்து செல்கின்றன. மின்சார துறைக்கு பொறுப்பான அமைச்சரோ, இதுபற்றி எந்த கவலையும் இல்லாமல், சாராய விற்பனையில் மட்டுமே முழுக்கவனமும் செலுத்தி வருகிறார்.

பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்

மின் துறையில் பணிபுரிபவர்களுக்கு, பாதுகாப்பு என்பது மிக முக்கியமான தேவையாகும். அவர்கள் பணிச்சூழலை அவ்வப்போது கவனமாக ஆய்வு செய்து, அனைத்து வகையான மின் ஆபத்துகள், வெள்ளம் மற்றும் உயர் மின்னழுத்த பகுதிகளை சுற்றியுள்ள மின் கம்பங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்து, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததால் ஏற்படும் அபாயம் குறித்து அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் இல்லாமல், தரமான மின் பொருள்களைக் கொள்முதல் செய்வதும், மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும்.

உடனடியாக, அமைச்சர் தனது தூக்கத்திலிருந்து விழித்து, மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அவர்களுக்கு தேவையான தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும். பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடும்போது, மின் துறை என்ஜினீயர்கள் உடனிருக்க வேண்டும். மின் ஊழியர்களின் பணிச்சூழல் பாதுகாப்பில் தொடரும் அலட்சிய போக்கை நிறுத்திவிட்டு, "2020, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும். இனியும் மின் துறை ஊழியர்களின் உயிர்களோடு விளையாடும் அமைச்சரின் அலட்சிய போக்கு தொடருமானால், தமிழக பாரதிய ஜனதா கட்சி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story