விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை


விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை
x

கயத்தாறு அருகே விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே, விவசாயியை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முதியவர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிவஞானபுரம் பஞ்சாயத்து வாகைத்தாவூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மந்திரம் (வயது 65). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி.

இந்த தம்பதியின் மகள் ஜெயாவுக்கும், அதே பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மர் மகன் சந்தனகுமாருக்கும் (36) கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது.

சந்தனகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சந்தனகுமாருக்கும், அவரது மனைவி ஜெயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயா கோபித்து கொண்டு தற்போது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார்.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் மந்திரம் (65) நேற்று மாலை அதே பகுதியில் பால் பண்ணைக்கு பால் ஊற்ற நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை சந்தனகுமார் வழிமறித்து தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சந்தனகுமார் ஆத்திரம் அடைந்து மந்திரத்தை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த மந்திரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீசார் மந்திரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகன் சந்தனகுமாரை தேடி வருகின்றனர்.


Next Story