மஞ்சப்பை விருது பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 லட்சம்


மஞ்சப்பை விருது பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 லட்சம்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:47 PM GMT)

மஞ்சப்பை விருது பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்ற தகவலை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டசபையில் நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும் 3-வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https/tenkasi.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 1-5-2023.

விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பம் இடப்பட்டு இருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் சிடி பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story