மேலபச்சக்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா


மேலபச்சக்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா
x

விராலிமலை அருகே மேலபச்சக்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ெபாதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர்.

புதுக்கோட்டை

மீன்பிடி திருவிழா

விராலிமலை ஒன்றியம், மேலபச்சக்குடியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த வருடம் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி கலிங்கி வழியாக உபரி நீர் வெளியேறியதில் குளத்திற்கு பல்வேறு வகையான மீன்கள் வந்து சேர்ந்தது.

தொடர்ந்து மேலபச்சக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெரிய குளத்தின் மழை நீரை விவசாயம் செய்தனர். இந்நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றியதால் ஊர் முக்கியஸ்தர்கள் நேற்று மீன்பிடி திருவிழா நடத்துவது என்று முடிவு செய்தனர். அதுபற்றிய தகவல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது.

போட்டிப்போட்டு மீன் பிடித்தனர்

இதையடுத்து நேற்று அதிகாலையிலிருந்து விராலிமலை, பாத்திமாநகர், அளுந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வந்து குளத்து கரையில் திரண்டிருந்தனர். அப்போது கிராம காவல் தெய்வமான அய்யனாருக்கு பூஜை நடைபெற்றது. பிறகு மேலபச்சக்குடி கிராம முக்கியஸ்தர் ராமசாமி குளத்துக் கரையின் மேல் நின்று வெள்ளைத்துண்டை வீச அங்கு தயாராக நின்ற ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் தாங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு போட்டிப்போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

இதில் விரால், ஜிலேபி கெண்டை, வலணை கெண்டை, குறுங்கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. அவற்றை சாக்கு, பை மற்றும் கூடைகளில் அள்ளி சென்றனர். பின்னர் அவற்றை தங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியுடன் சமைத்து உண்டனர்.


Next Story