தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி, இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை 6 செ.மீ., ஓசூர், சூளகிரி, சின்னார் அணை தலா 5 செ.மீ., முண்டியம்பாக்கம், கெலவரப்பள்ளி அணை தலா 4 செ.மீ., ஏற்காடு, சின்னக்கல்லார், வானூர், கோலியனூர், தளி, வளவனூர், மூங்கில் துறைப்பட்டு, மேட்டூர், கேதார், விழுப்புரம், சூரப்பட்டு, சோலையார் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.


Next Story