வருகிற 13-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


வருகிற 13-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x

வருகிற 13-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகின்ற 15-ந்தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் என்றும், இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story