கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு  கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

செமப்புதூர் பஞ்சாயத்து முறைகேடுகளை கண்டித்து கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு சிங்கராஜ் தலைமையில் நேற்று செமப்புதூர் கிராம மக்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினா்.

செமப்புதூர் பஞ்சாயத்து வடக்கு செமப்புதூர், அஞ்சுராம் பட்டி கிராமங்களில் பஞ்சாயத்து பணிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் சரிவர நடைபெறாததை கண்டித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடந்து வரும் ஊழலை கண்டித்தும், முறையாக கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல், ஊராட்சி கூட்டங்களை நடத்தாமல், கிராமப் பகுதிகளில் வாறுகால் சுத்தப்படுத்தாமல், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப் படாமல் இருப்பது, மயானத்திலிருந்து அடிபம்பு மண்மூடி பயனற்ற நிலையில் உள்ளதாகவும் கூறி இந்த போராட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் மாரிமுத்து, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பொன்ராஜ், தங்கதுரை, மகராசி, செல்வலட்சுமி, கீதா, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் தாவீது ராஜா உட்பட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story