உப்புக்கோட்டையில்தக்காளி விலை வீழ்ச்சி


உப்புக்கோட்டையில்தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

உப்புக்கோட்டையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி

உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன் பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. வருடத்தின் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவதே இப்பகுதியின் சிறப்பம்சம் ஆகும்.

முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளைச்சல் அடையும் இப்பகுதி காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். இதனால் இந்த பகுதி காய்கறிகளுக்கு தேனி மட்டுமின்றி வெளிமாவட்டம் மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் நல்ல கிராக்கி உள்ளது. கடைமடை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்டது.

போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்றாக விளைச்சல் அடைந்து உள்ளது. தற்போது தக்காளிகளை பறித்து தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ தக்காளி அடங்கிய கூடை கடந்த வாரம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைந்து ரூ.60-க்கு விற்பனையாகிறது. இந்த விலை சரிவால் தக்காளி சாகுபடி செய்த கடைமடை பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story