தூத்துக்குடியில் தபால் நிலையம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடியில்  தபால் நிலையம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

தூத்துக்குடியில் தபால் நிலையம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மதுரை/ நெல்லையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று செய்து வந்த சான்றிதழ் சரி பார்ப்பு பணி தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திலும் செய்யப்படுகிறது.

தற்போது தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவகலங்களிலும் சி.எஸ்.சி என்ற சேவை மூலம், புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்றவற்றிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். விண்ணப்பித்த பின் எந்த தேதியில் அவர்கள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்கிற விவரம் தெரிவிக்கப்படும். அந்த குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறாக பொது மக்கள் அனைவரும் பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக பாஸ்போர்ட் பதிவு, புதுப்பிக்கும் திட்டத்தை உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.


Next Story