விவசாயியை காரில் கடத்திச்சென்று கொலை செய்தது அம்பலம்


விவசாயியை காரில் கடத்திச்சென்று கொலை செய்தது அம்பலம்
x

ஜமுனாமரத்தூர் அருகே விவசாயி மர்மமாக இறந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவரை காரில் கடத்தி சென்று கொலை செய்த வனவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் அருகே விவசாயி மர்மமாக இறந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவரை காரில் கடத்தி சென்று கொலை செய்த வனவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயி

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் கீழ்கனவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28), விவசாயி. திருமணமான இவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி இவர் வேடகொல்லைமேடு அமிர்தி சாலையோரம் பிணமாக கிடந்தார். இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கழுத்து இறுக்கியும், தாக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த ராமதாஸின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜவ்வாதுமலையில் வனவராக பணிபுரியும் அவரது நண்பர் கோமுட்டேரியை சேர்ந்த ராஜாராம் (26) என்பவரிடம் அதிகமாக பேசியுள்ளது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ராஜாராம் அவரது நண்பர்களுடன் இணைந்து ராமதாஸை கொலை செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இது குறித்து போலீசார் கூறுகையில், ராஜாராம் வனப்பகுதியில் வெட்டிக் கடத்தும் செம்மரக்கடையை மறைத்து வைப்பதற்கு இடம் கேட்டு உள்ளார். ஆனால் ராமதாஸ் இடம் தர மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அவரது நண்பர்கள் செய்யாறு அருகில் தாங்கல் பகுதியை சேர்ந்த குகன் (20), கிருபாகரன் (26) ஆகியோருடன் இணைந்து கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

சம்பவத்தன்று கீழ்கனவாயூர் கிராமத்திற்கு பஸ்சில் வந்து இறங்கிய ராஜாராமை அவர்கள் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை மீண்டும் காரில் கொண்டு வந்து வேடகொல்லைமேடு சாலையோரம் வீசிவிட்டு சென்று உள்ளனர். இதையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய வனவர் ராஜாராம், அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story