பெரிய பூலாப்பட்டியில் பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


பெரிய பூலாப்பட்டியில்  பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x

பெரிய பூலாப்பட்டியில் நடந்த பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

காரிமங்கலம்:

தர்மபுரி அடுத்த பெரிய பூலாப்பட்டியில் பச்சியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மூலஸ்தான கோபுரம் புதிதாக அமைத்து காத்தவராயன், வீரபத்திரன், காமாட்சி, மீனாட்சி, முனீஸ்வரன் சிலைகள் மற்றும் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கங்கணம் கட்டுதலும், முளைப்பாரி ஊர்வலம், வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் கோபுர கலசம் நிறுவப்பட்டு பச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நாளான நேற்று யாக சாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசம், பச்சியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் 18 கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story