வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
x

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) உருவாகிறது என்றும், தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 5-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் வெப்பநிலை இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தென் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும் 8-ந்தேதி வரை இலங்கை கடலோர பகுதிகள், அதனையொட்டிய வங்கக்கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தேவாலா, மாமல்லபுரத்தில் தலா 8 செ.மீ. மழையும், கூடலூர் பஜார், கேளம்பாக்கம், மேல்கூடலூர், பேச்சிப்பாறை, காஞ்சீபுரத்தில் தலா 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இதற்கிடையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story