ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ராகி நேரடி கொள்முதல் நிலையம்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ராகி நேரடி கொள்முதல் நிலையம்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ராகி நேரடி கொள்முதல் நிலையத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கொள்முதல் நிலையம்

தர்மபுரி அருகே உள்ள மதிகோண்பாளையம் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ராகி நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, ராகி கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு விதைகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு மாதமும் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் நேரடியாக ராகி கொள்முதல் நிலையத்திற்கு வந்து பட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களுடன் இணைய வழி மூலமாக தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்து ராகியை விற்பனை செய்து பயன்பெறலாம்.

வங்கி கணக்கில்

விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த ராகிக்கு உரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள் ராகி விற்பனை செய்வது தொடர்பான தங்களின் சந்தேகங்களை வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story