பள்ளிபாளையத்தில் பயங்கரம்: தையல் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை-மகனுக்கு போலீஸ் வலைவீச்சு


பள்ளிபாளையத்தில் பயங்கரம்: தையல் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை-மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பள்ளிபாளையத்தில் தையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மதுபோதையில் தகராறு

சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (48). இந்த தம்பதிக்கு கவின் (22) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் மனைவி மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழனிசாமி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மஞ்சுளா கோபித்து கொண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஐந்துபனை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகன் கவினுடன் சென்று விட்டார்.

கல்லால் தாக்கி கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பழனிசாமி, தனது மனைவியை பார்ப்பதற்காக ஐந்துபனை பகுதிக்கு வந்தார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பழனிசாமி வீட்டில் இருந்த மஞ்சுளாவை குடும்பம் நடத்த எடப்பாடிக்கு வருமாறு அழைத்தார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் பழனிசாமி, மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த கவினுக்கும், பழனிசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவின் அங்கிருந்த கல்லை எடுத்து பழனிசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பழனிசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அங்கேயே கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதையடுத்து கவின் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவினை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தாயை தகாத வார்த்தையால் திட்டியதால் தந்தையை, மகனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story