ரோந்து போலீசாரின் கண்காணிப்பை உறுதிப்படுத்த புதிய செல்போன் செயலி


ரோந்து போலீசாரின் கண்காணிப்பை உறுதிப்படுத்த புதிய செல்போன் செயலி
x

குற்றம் நடைபெறமால் தடுக்க ரோந்து செல்லும் போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த  போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புதிதாக செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

குற்றம் நடைபெறமால் தடுக்க ரோந்து செல்லும் போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த  போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புதிதாக செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

புதியதாக செல்போன் செயலி

தமிழக காவல் துறையில் புதிதாக 'ஸ்மார்ட் காவலர் இ- பீட்' முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை டவுன், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி, செய்யாறு, செங்கம், ஆரணி டவுன் ஆகிய போலீஸ் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் இ- பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த திட்டத்தில் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் போலீசார் ஸ்மார்ட் காவலர் என்ற செல்போன் செயலியில் தனது ரோந்து பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம், வங்கி, பூட்டிய வீடுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு சென்று தணிக்கை செய்யும் போது அதன் விவரங்களை ஆன்லைன் முறையில் இந்த செயலியின் மூலமாக பதிவேற்றம் செய்வர்.

குற்றம் நடைபெறும் இடங்கள்

மேலும் அவரவர் சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள், வரலாற்று பதிவேடு குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் நடவடிக்கைகளை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கலாம்.

போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியாக விளங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் கண்காணித்து போலீசாருக்கு அவ்வபோது உத்தரவுகளை பிறப்பித்து தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள், மூத்த குடிமக்கள் தனியார் வசிக்கும் வீடுகள் மற்றும் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது பூட்டிய வீடுகள் பற்றிய விவரங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றால் அவ்விடங்கள் பற்றிய விபரங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு உறுதிபடுத்தப்பட்டு குற்றம் நடைபெறமால் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story