மதுரை அருகே பயங்கரம்: மாமனார் வீட்டில் வாலிபர் படுகொலை -கதவை உடைத்து புகுந்த கும்பல் வெறிச்செயல்


மதுரை அருகே பயங்கரம்: மாமனார் வீட்டில் வாலிபர் படுகொலை -கதவை உடைத்து புகுந்த கும்பல் வெறிச்செயல்
x

மாமனார் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபரை, கதவை உடைத்து புகுந்த கும்பல் வெட்டிக்கொன்றது.

மதுரை


மாமனார் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபரை, கதவை உடைத்து புகுந்த கும்பல் வெட்டிக்கொன்றது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

தொழிலாளி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர், மீது கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள முறுக்கு கம்பெனியில் வேலை செய்து, அங்கு தலைமறைவாக இருந்து வந்தார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மூக்கம்மாள், தனது குழந்தைகளுடன் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மேல உறங்கான்பட்டியில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

வழக்கில் ஆஜர்

இந்தநிலையில், அழகுபாண்டி மீதான கொலை முயற்சி வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஆஜராவதற்காக ஆந்திராவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அழகுபாண்டி, மேல உறங்கான்பட்டியில் உள்ள மாமனாரின் வீட்டிற்கு வந்தார்.

நேற்று முன்தினம் மாமனார் வீட்டில் அழகுபாண்டி தூங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில், அவருடைய மனைவி, குழந்தைகள் தூங்கினர். முன்பக்க அறையில் அவரது மாமனார் படுத்து இருந்தார்.

வீடு புகுந்த கும்பல்

நள்ளிரவில், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த வீட்டிற்குள் கதவை உடைத்து புகுந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அழகுபாண்டியின் மாமனாரை தாக்கினர். பின்னர் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அழகுபாண்டியை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் விழுந்தன. இதனால், அழகுபாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

சத்தம் கேட்டு பக்கத்து அறைக்குள் படுத்து தூங்கிய அழகுபாண்டியின் மனைவி மற்றும் மகன்கள் எழுந்து வந்து பார்த்தபோது, அவர் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அதிர்ச்சி அடைந்து அலறினர்.

விசாரணை

இந்த படுகொலை குறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அழகுபாண்டியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினியும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அழகுபாண்டி முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story