ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது - ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது - ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x

ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். அவருக்கு பதிலாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ரவீந்திரநாத் குமாரின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ரவீந்திரநாத் அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறி உள்ளார்.

அதனுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விபரங்களையும் இணைத்து அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார். இது சபாநாயகர் ஓம் பிர்லா எடுக்கும் முடிவை பொறுத்தது. இந்த நிலையில் இதற்கு பதில் கடிதம் ரவீந்திரநாத் சார்பில் எழுதபட்டு உள்ளது.


Next Story