சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்


சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்
x

சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என கி.வீரமணி கூறினார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கடைவீதியில் திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீலமேகன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் கோவிந்தராஜன், மண்டல செயலாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். முன்னதாக மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- திராவிடர் கழகம் என்பது சமூக நீதி, சமூக இயக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை கொண்டது. தந்தை பெரியார் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றார். 50 சதவீத பெண்கள் வாக்கு செலுத்தினால் தான் அனைவரும் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதற்கு மறுக்கின்றார்கள். ஆனால் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வதற்கு 23 ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் உள்ளது போல் நாடாளுமன்றத்தில் இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் 3-வது முறையாக பிரதமராக வேண்டும் என்று மோடி நினைக்கின்றார். ஆனால் கேட்காமலேயே பெண்கள் போராட்ட களத்துக்கு வராமலேயே இந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காட்டிற்கு வெற்றி பெறச்செய்து, அந்தந்த ஊர்களில் பெண்களை வெற்றி பெறச்செய்து நாற்காலியில் அமர்த்திய பெருமை இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உண்டு. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட வேண்டும். நிதிக்கு ஒன்றிய அரசை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. மாநில உரிமைகளை காத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மற்றும் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story