சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைதாக வாய்ப்பு - போலீசார் தகவல்


சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைதாக வாய்ப்பு - போலீசார் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2022 4:16 AM GMT (Updated: 14 Oct 2022 4:17 AM GMT)

சின்னத்திரை நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'செவ்வந்தி' என்னும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் நடித்து வரும் நடிகர் அரணவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டார்.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பதிலுக்கு அரணவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார். இந்த நிலையில், சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த 12-ம் தேதி போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைதாக வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story