மாமியாரை தாக்கிய மருமகன் கைது
சேரன்மாதேவியில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ெரயில்வே லைன் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மனைவி தங்கம்மாள் (வயது 62). இவரது மகள் செல்விக்கும், திருச்சியை சேர்ந்த ராஜ்குமார் (34) என்பவருக்கும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் செல்வி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து ராஜ்குமார் சமீபத்தில் யாரிடமும் சொல்லாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தங்கம்மாளுக்கு தெரியவரவே, அவர் ராஜ்குமார் மீது ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் தங்கம்மாளின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரை தங்கம்மாள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தங்கம்மாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.