2-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு


2-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு
x

ஓசூரில் நண்பர்களுடன் விளையாட சென்ற 2-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

2-ம் வகுப்பு மாணவன்

ஓசூர் சின்னஎலசகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் சசிகுமார் (வயது 7). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மதியம் மாணவன் சசிகுமார், நண்பர்களுடன் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றான். பின்னர் நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். மேலும் அவனது நண்பர்களிடமும் விசாரணை நடத்தினர்.

பலி

இந்தநிலையில் சின்னஎலசகிரி ஏரிக்கரையோரம் மாணவன் சசிகுமாரின் ஆடைகள் கிடந்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏரியில் சசிகுமாரை தேடினார். அப்போது தண்ணீரில் மூழ்கி சசிகுமார் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவனது உடல் மீட்கப்பட்டது. அதனை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், நண்பர்களுடன் விளையாட சென்ற சசிகுமார், ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன், ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story