'மாண்டஸ்' புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது -தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மாண்டஸ் புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது -தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x

மாண்டஸ் புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழகம், புதுச்சேரி அரசுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கன்னியாகுமரி,

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி சென்றார். அவர் நேற்று காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் தென்பகுதிக்கு வரும்போது தாய் வீட்டிற்கு வந்த உற்சாகத்துடன் வருகிறேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியில் எனது பங்கு இருக்கும்.

தமிழக அரசு 'மாண்டஸ்' புயலை சிறப்பாக எதிர்கொண்டது போல் புதுச்சேரியிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் எவ்வளவு சேதம் ஏற்படும் என்று கருதப்பட்டதோ, அதேபோல் புதுச்சேரிக்கும் சேதம் எதிர்பார்க்கப்பட்டது. புயலை எதிர்கொண்ட விதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சிறப்பாக செயல்பட்டன.

தவறை சுட்டி காட்டுவது கடமை

சென்னை பெண் மேயர் காரில் தொங்கி சென்றது அவரது விருப்பமா? என எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

தமிழகத்தில் எந்த துறை சிறப்பாக நடந்தாலும் பாராட்ட வேண்டியது அவசியம் தான். ஆனால் தவறை சுட்டி காண்பிப்பது எனது கடமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்துக்கு சென்றார். அங்கு தான் படித்த நேரு தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவருக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள் நன்றாக கல்வி பயின்று தன்னை போன்று கவர்னராக வரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் வடக்கன்குளத்தில் உள்ள அதிசய விநாயகர் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.


Next Story