மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,600 கனஅடியாக குறைந்தது 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றம் நிறுத்தம்


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து   21,600 கனஅடியாக குறைந்தது   16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றம் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Dec 2022 8:00 PM GMT (Updated: 14 Dec 2022 8:45 PM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 600 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 7-ந் தேதி 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வரை வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கன அடியாக மேலும் அதிகரித்தது.

உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வரையில் மட்டுமே தண்ணீர் வெளியேற்ற முடியும். அதே நேரத்தில் கூடுதல் நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 21 ஆயிரத்து 600 கனஅடியாக குறைந்தது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.

12 மணி நேரத்தில்...

உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு 12 மணி நேரத்திலேயே மீண்டும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

அணையில் இருந்து நீர் மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாயில் வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


Next Story