கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது


கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
x

கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது/

புதுக்கோட்டை

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ். இவரது மனைவி பவித்ரா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சில் பவித்ராவை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் பவித்ராவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, டிரைவர் தேவபாஸ்கரன் ஆகியோர் சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினர்.

பின்னர் பவித்ராவுக்கு ஆம்புலன்சில் இருந்த நர்ஸ் மேனகா காந்தி பிரசவம் பார்த்தார். அப்போது பவித்ராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து உடனடியாக தாயும், சேயும் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் ஆண்டியப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மனைவி அஞ்சலை (29) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அவரின் உறவினர்கள் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சை அழைத்தனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்ற முயன்றபோது அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் அவரது வீட்டில்வைத்து, ஆம்புலன்சில் வந்த நர்ஸ் பிரசவம் பார்த்தார். அப்போது அஞ்சலைக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும், சேயையும் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தக்க நேரத்தில், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை, கர்ப்பிணிகளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story