பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்:    வாலிபருக்கு 7 ஆண்டு சிறை    கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடலூர்


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கார்த்திக் என்கிற பொன்ராமன் (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கடலூர் முதுநகரில் வசித்து வந்த தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது பெற்றோரை இழந்து முதுநகரில் உள்ள சித்தி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியுடன் கார்த்திக்குக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 25.12.2019 அன்று இரவு மாணவியின் சித்தி இரவு பணிக்கு சென்றதால், மாணவியை கார்த்திக்கின் அக்காள் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். அப்போது நள்ளிரவு நேரத்தில் கார்த்திக் அந்த பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது பற்றி மாணவி தனது சித்தியிடம் கூறி கதறிஅழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

7 ஆண்டு சிறை

அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக நலத்துறையின் கீழ் உள்ள நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா செல்வி ஆஜராகி வாதாடினார்.


Next Story