மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவ அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினார்.

ஊஞ்சல் உற்சவம்

இதையடுத்து இரவு 11 மணியளவில் உற்சவ அம்மன் பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். பின்பு பூசாரிகள் பத்தி பாடல்களை பாடினர். அப்போது அம்மன் ஊஞ்சலில் அமர்ந்தபடி முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணியளவில் அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு அம்மன் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story