கொரோனா கட்டுப்பாடுகள்: கேரளாவில் 25 யானைகள் பலி..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Nov 2021 8:36 PM GMT (Updated: 24 Nov 2021 8:36 PM GMT)

கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக கேரளாவில் இதுவரை 25 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலக்காடு, 

யானைகளுக்கு பெயர் பெற்ற கேரள மாநிலத்தில் கோவில்களிலும், தனியார் பலராலும் யானைகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 453 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா கால கட்டுப்பாடுகள், இந்த வளர்ப்பு யானைகளையும் பாதித்துள்ளன. அதிக நேரம் கட்டிப் போடப்பட்டதாலும், போதிய பயிற்சி இன்றியும் பல யானைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் விழாக்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாலும், மற்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றில் யானைகள் பங்கேற்பது குறைந்துள்ளது. அவை பெரும்பாலான நேரங்களில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன. மரம் தூக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவை தவிர மற்ற யானைகளின் நிலை இதுதான். இதனால் நடைபயிற்சி போன்றவை இல்லாமல் யானைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கால்நடை டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் கேரளாவில் இந்த ஆண்டில் இதுவரையிலான 11 மாதங்களில் 25 வளர்ப்பு யானைகள் இறந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை செரிமானக் கோளாறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவை.

யானைகளின் சராசரி ஆயுள்காலம் 70 முதல் 80 ஆண்டுகள் என்றபோதும், மனிதர்களால் பராமரிக்கப்படும் யானைகள் பெரும்பாலும் சுமார் 60 வயதில் இறந்துவிடுவதுதான் சோகம்.

Next Story