டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு; விவசாய சங்கங்கள் அறிவிப்பு


டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு;  விவசாய சங்கங்கள்  அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 10:56 AM GMT (Updated: 27 Nov 2021 10:56 AM GMT)

29-ஆம் தேதி நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்ற விவசாயிகள் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். 

விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருகின்ற  பாராளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ம் தேதி  பாராளுமன்றம்  நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தனர்.  இந்த நிலையில், 29-ஆம் தேதி நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

இன்றைய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விவசாய சங்க நிர்வாகி ராஜ்வீர் சிங் ஜடவுன் கூறியதாவது: குறைந்த பட்ச ஆதார விலை, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள், லகிம்பூர் வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றார். 

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021- வரும் 29-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story