ஸ்காட்லாந்தில் 2–வது கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை தெரசா மே நிராகரித்தார்


ஸ்காட்லாந்தில் 2–வது கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை தெரசா மே நிராகரித்தார்
x
தினத்தந்தி 17 March 2017 9:45 PM GMT (Updated: 17 March 2017 8:21 PM GMT)

இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் இரண்டாவது கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என தெரசா மே நிராகரித்து விட்டார்.

லண்டன்,

இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து ஒரே நாடாக உள்ளது. இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் 2014–ம் ஆண்டு கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற வேண்டாம் என 55.3 சதவீத மக்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு எடுத்து விட்டது. இதற்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன. ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது ஸ்காட்லாந்துக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் இரண்டாவது கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதன் முதல்–மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் விரும்புகிறார். இதை அவர் 2018 ஜூலை – 2019 ஜூன் கால கட்டத்துக்கு இடையே நடத்த திட்டமிட்டார். இதற்கான அனுமதியை அவர் இங்கிலாந்து அரசிடம் கோரினார்.

ஆனால் அதை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே நிராகரித்து விட்டார். இது தொடர்பாக டி.வி. சானல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ‘‘இப்போது நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். பிரிந்து செல்லக்கூடாது. இது கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான தருணம் அல்ல’’ என கூறினார்.

ஆனால் இதை ஸ்காட்லாந்து முதல்–மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் கடுமையாக சாடினார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது ஜனநாயக சீரழிவு’’ என குறிப்பிட்டார்.

Next Story