சீனாவை மட்டம் தட்டுவதற்காக தலாய்லாமாவை இந்தியா பயன்படுத்த கூடாது: சீனா சொல்கிறது


சீனாவை மட்டம் தட்டுவதற்காக  தலாய்லாமாவை இந்தியா பயன்படுத்த கூடாது: சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 17 April 2017 9:38 AM GMT (Updated: 17 April 2017 10:21 AM GMT)

சீனாவை மட்டம் தட்டுவதற்காக தலாய்லாமாவை இந்தியா பயன்படுத்த கூடாது என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்,

திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது. இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது. 

இதற்கிடையில் அருணாசல பிரதேசத்தில் உள்ள போம்டியால், தவாங், உள்ளிட்ட இடங்களில் சில ஆன்மீக நிகழ்ச்சிகளில்,  கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துவிட்டது. இதனால், இந்தியா மீது சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சீன செய்தி தொடர்பாளர் லூ காங், சீனாவை மட்டம் தட்டுவதற்காக தலாய்லாமாவை இந்தியா பயன்படுத்த கூடாது என்று  தெரிவித்துள்ளார். இது குறித்து லூ காங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “ சர்ச்சைக்குரிய எல்லை விவகாரம் இந்தோ-சீனா இடையிலான உறவுகளுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக தலாய்லமாவின் அருணாச்சல பிரதேசம் வருகை அமைந்துள்ளது.  சீனாவின் நலன்களை பலவீனப்படுத்துவதற்காக  இந்தியா, தலாய்லாமாவை பயன்படுத்த கூடாது” என்றார்.

Next Story