விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கு விசாரணை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கு தொடர்பான விசாரணை லண்டன் கோர்ட்டில் ஜூன் மாதம் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லண்டன்,
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவாக பிரிட்டன் அரசு வழக்கறிஞர்கள் அமைப்பு சிபிஎஸ் ஆஜராகிறது.
வழக்கு விசாரணையானது ஜூன் மாதம் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக வழக்கு விசாரணை மே மாதம் 17-ம் தேதியே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீர்கமாக உள்ளது இந்திய அரசு. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இவ்விவகாரம் தொடர்பாக லண்டன் சென்று, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தனர், முக்கியமான ஆதாரங்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்திய அரசு வழங்கிய தகவலின்படியே சிபிஎஸ் வாதிட உள்ளது, வழக்கை மிகவும் வலுவாக்கும் முயற்சியில் இந்திய தரப்பு செயல்பட்டு வருகிறது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் இந்தியாவில் இருந்து தப்பி லண்டன் சென்றுவிட்டார். அவரை கைது செய்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே கடந்த மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விஜய் மல்லையாவை கைது செய்தனர். ஆனாலும் சில மணி நேரத்துக்குள் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story