இஸ்லாமாபாத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நவாஸ் ஷெரீப் குணம் அடைகிறார்


இஸ்லாமாபாத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நவாஸ் ஷெரீப் குணம் அடைகிறார்
x
தினத்தந்தி 1 Aug 2018 12:00 AM GMT (Updated: 31 July 2018 8:43 PM GMT)

கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குணம் அடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத், 

ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடுகள் வாங்கிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த மாதம் 13-ந் தேதி ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர் கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்லூரி ஆஸ்பத்திரியில் (பிம்ஸ்) சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் குணம் அடைந்து வருவதாக அவருக்கு அங்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் நேற்று கூறுகையில், “நவாஸ் ஷெரீப்புக்கு இதய மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நயீம் மாலிக் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த 3 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குணம் அடைந்து வருகிறார்” என குறிப்பிட்டனர்.

அவர் ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டும் சிறைக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவல்களை டாக்டர்கள் மறுத்தனர். அவரது உடல்நிலையைப் பொறுத்துத்தான் அவர் மீண்டும் சிறைக்கு மாற்றப்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும்; அவரது உடல் நிலை குறித்த முழுமையான அறிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

Next Story