விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய இலங்கையின் முன்னாள் தமிழ் பெண் மந்திரி கைது


விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய இலங்கையின் முன்னாள் தமிழ் பெண் மந்திரி கைது
x
தினத்தந்தி 8 Oct 2018 12:56 PM GMT (Updated: 8 Oct 2018 12:56 PM GMT)

இலங்கையில் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதால் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தமிழ் பெண் மந்திரி கைது செய்யப்பட்டார்.


கொழும்பு,  

இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த ஜூலை 2–ந் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். 

 அவர் பேசுகையில், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ‘வடக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்’  நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச்சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டது என்றார். 

 விஜயகலாவின் இந்த கருத்துக்கு சிங்களர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசிய அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.  பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய விஜயகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. கட்சிலும் எதிர்ப்பு வலுக்கவே விஜயகலா தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, அட்டார்னி ஜெனரல் கருத்தும் கேட்கப்பட்டது. இந்நிலையில், குற்ற தடுப்பு போலீசார் விஜயகலாவை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்கள். அதன்படி போலீசார் முன்பு ஆஜரான விஜயகலா தனது வாக்குமூலத்தை அளித்தார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story