முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது: நாடாளுமன்றத்தை 7-ந்தேதி கூட்ட சிறிசேனா சம்மதம்


முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது: நாடாளுமன்றத்தை 7-ந்தேதி கூட்ட சிறிசேனா சம்மதம்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:30 PM GMT (Updated: 2 Nov 2018 8:49 PM GMT)

இலங்கையில் நாடாளுமன்றத்தை 7-ந்தேதி கூட்டுவதற்கு அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனால் நாடாளுமன்ற முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நான் பிரதமராக தொடர்ந்து நீடிக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று விக்ரமசிங்கே கூறி வருகிறார்.

இந்தநிலையில் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா 16-ந்தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார்.

இதற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால் இலங்கையில் அரசியலில் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பிரதமர் ராஜபக்சே வருகிற 5-ந்தேதி(திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கூடும் என்று தெரிவித்தார். பின்னர் ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் இதை மறுத்தனர்.

அதேநேரம் 16-ந்தேதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது என்று அதிபர் சிறிசேனா கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியாவை, விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 115 எம்.பி.க்கள் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் நாடாளுமன்றம் கூடும் தேதியை சபாநாயகர் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி அதிபர் சிறிசேனாவுடன் சபாநாயகர் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெயசூரியா கொழும்பு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தை வருகிற 7-ந்தேதி கூட்டுவதற்கு அதிபர் சிறிசேனா ஒப்புக் கொண்டு இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இந்த திடீர் திருப்பத்தால் நாடாளுமன்ற முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது.

இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவாளர்கள் ஒரு எம்.பி.க்கு இந்திய மதிப்பில் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசி பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க்களை இழுக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது ராஜபக்சேவுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜபக்சேவின் அணிக்கு 5 எம்.பி.க்கள் தாவிய பிறகு விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 101 எம்.பி.க்களும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனாவிற்கு 6 எம்.பி.க்களும் இதர 2 சிறு கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி.யும் உள்ளனர்.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story