கோமா நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்:மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா


கோமா நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்:மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா
x
தினத்தந்தி 9 Jan 2019 8:33 AM GMT (Updated: 9 Jan 2019 9:42 AM GMT)

14 வருடங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம் மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் நீண்ட 14 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்மணி கர்ப்பமான விவகாரத்தில், அந்த மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாசிண்ட்டா மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்மணி கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி  திடீரென்று பிள்ளை பெற்றெடுத்தார். இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையில் இந்த  பெண்மணி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இதனிடையே மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் அறியாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை என முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நீண்ட பத்தாண்டு காலம் அந்த மருத்துவமனையில் தாம் பணியாற்றியதாகவும், அப்போது இதுபோன்று கோமா நிலையில் இருந்த ஆண் நோயாளி ஒருவர் தொடர்பில் அவரது பாலுறுப்பு குறித்து அங்குள்ள நர்சுகள் ஆபாசமாக கிண்டல் செய்ததை தாம் காதால் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி பெண் நர்சுகளால் அந்த நோயாளி துஷ்பிரயோகத்திற்கு இரையாகியிருக்கலாம் எனவும், ஆனால் இந்த விவகாரத்தை பில் டிம்மன்ஸ் மேலிடத்திற்கு தெரிவிக்காமல் மூடிமறைத்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். பில் டிம்மன்ஸ் என்றாலே அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் பயந்து நடுங்குவதாகவும், அவருக்கு தெரியாமல் அந்த மருத்துவமனையில் எதும் நடக்காது எனவும் அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ளார். தற்போது கோமாவில் இருந்த பெண் பிள்ளை பெற்ற விவகாரத்திலும் அதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாணமாக இருக்கும்போது அல்லது அவர்களின் உடல்களை துடைக்கும்போதோ போதுமான தனியுரிமை இல்லை என முறைகேடு குறித்து புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்தவொரு தகவலையும் தர மறுத்துவிட்டார் ஃ பீனிக்ஸ் காவல்துறை செய்திதொடர்பாளர்.

Next Story