தொடர் விமான விபத்து: போயிங் நிறுவனம் மீது வழக்கு


தொடர் விமான விபத்து: போயிங் நிறுவனம் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 7:38 PM GMT)

தொடர் விமான விபத்துக்கு காரணமான போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிகாகோ,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனம் தயாரித்த ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 189 பேரும் பலியாகினர். இதே ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததை தொடர்ந்து சீனா மற்றும் எத்தியோப்பியா உடனடியாக அந்த ரக விமானங்களை இயக்க தடை விதித்தது. அதனை தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்துள்ளன.

இந்த நிலையில், இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகர கோர்ட்டில் 35 வழக்குகளும், சியாட் நகர கோர்ட்டில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story