உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 7:02 PM GMT)

ஈராக்கில் உள்ள அன்பார் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது 3 பேர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.


* ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடம் என நினைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிக்கி 17 போலீசார் பலியாகினர்.

* பாகிஸ்தானில், சீன நாட்டினரை திருமணம் செய்து கொண்ட கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் சீனா செல்ல மத்திய புலனாய்வு படை (எப்.ஐ.ஏ.) தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து அவர்கள் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை சட்டவிரோதமாக தடை செய்த எப்.ஐ.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வழக்கில் கோரி உள்ளனர்.

* வடகொரியா சமீபத்தில் குறைந்த தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இந்த நிலையிலும், அந்த நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொருட்கள் வழங்குவது தொடரும் என தென் கொரிய ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு அலுவலக உயர் அதிகாரி சுங் இய் யாங் கூறினார்.

* அமெரிக்காவில் சிகாகோவில் ஓசோவா லோபெஸ் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு குழந்தைக்கான உடைகள், பொருட்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிலர் வரவழைத்து கொலை செய்து விட்டனர். அதன் பின்னர் அவரது கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு விட்டனர். இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

* ஈராக்கில் உள்ள அன்பார் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது 3 பேர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Next Story