அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு


அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 7:26 PM GMT)

அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் விமானப் படையின் கீழ் தேசிய விமான காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்த படைக்கு ‘எப்-16’ ரக போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு விட்டு, கலிபோர்னியா மாகாணம், மோரேனோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மார்ச் ஏர் ரிசர்வ் தளத்துக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு திரும்பிக்கொண்டிருந்தது.

அப்போது அந்த விமானம் சற்றும் எதிர்பாராத விதத்தில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள சேமிப்புக்கிடங்கு நிறுவன கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் விமானி மட்டுமே பயணம் செய்ததாகவும், அவர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் விரைந்து சென்று, அந்த விமானியையும், காயம் அடைந்த மற்ற 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எந்திர பழுதுதான் விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த விமான விபத்து, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


Next Story