பிரான்சில் பரபரப்பு : ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி
36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்தது.
பாரீஸ்,
36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் புறநகர் செயிண்ட் கிளவுடில் அமைந்து உள்ள ரபேல் போர் விமான திட்ட அலுவலகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயற்சி செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடுவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழு இருந்து, ரபேல் போர் விமான தயாரிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.