35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி


35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி
x
தினத்தந்தி 2 Aug 2019 11:15 PM GMT (Updated: 2 Aug 2019 8:18 PM GMT)

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழந்தார்.

அண்டனானரீவோ,

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த மாதம் 25-ந் தேதி, உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றார். பின்னர் ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் அஞ்சாஜாவிக்கு புறப்பட்டார். விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்தபோது தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற அலானா கட்லாண்ட் திடீரென விமானத்தின் கதவை திறந்தார். இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் உருவானது.

என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள் அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். உடனடியாக அருகில் இருந்த பயணி ஒருவர் அவரது காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு விமானத்தின் கதவை மூட முயன்றார். ஆனால் அதையும் மீறி அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்து குதித்தார். அவரது உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அலானா கட்லாண்ட் எதற்காக விமானத்தில் இருந்து குதித்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மடகாஸ்கர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.


Next Story