சிக்கலில் மதபோதகர் ஜாகீர் நாயக்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மலேசிய அமைச்சர்


சிக்கலில் மதபோதகர் ஜாகீர் நாயக்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மலேசிய அமைச்சர்
x
தினத்தந்தி 14 Aug 2019 5:32 AM GMT (Updated: 14 Aug 2019 5:32 AM GMT)

மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய அமைச்சர் ஒருவர் வலியுறுத்தி உள்ளார்.

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக். இவர் தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டி பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமை உணர்வை வளர்க்க முயற்சி செய்ததும் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு அமைப்பு இவர் மீது  வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே இவர் மலேசியாவில் தலைமறைவாக உள்ளார்.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்கு அவர் வெளிநாட்டில் இருந்து வருகிறார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்த இன்டர்போல், எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர் நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 2017-ல் நிராகரித்து விட்டது.

ஜாகீர் நாயக் வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்க வேண்டியது உள்ளது என இந்திய அரசு, 2018-ல் அவரை நாடு கடத்த மலேசிய அரசுக்கு முறையான கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும் சாதகமான பதில் வரவில்லை.

இந்த நிலையில் இந்து மலேசியர்களின் விசுவாசத்தை  கேள்விக்குள்ளாக்கியதற்காக சர்ச்சைக்குரிய முஸ்லீம் போதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

நாயக் ஒரு வெளிநாட்டவர், அவர் தப்பிவந்தவர் மற்றும் மலேசிய வரலாற்றைப் பற்றி சிறிதளவும் தெரியாதவர், ஆகவே, மலேசியர்களை வீழ்த்துவதற்கு அவருக்கு அத்தகைய பாக்கியம் வழங்கப்படக்கூடாது, அவர் நாட்டின் மீது  கொண்டுள்ள விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குகிறது "என்று குலசேகரன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் நிரந்தரமாக இங்கு இருக்கும் அந்தஸ்துக்கு  தகுதியானதாக பிரதிபலிக்கவில்லை. இந்த விவகாரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும்.

மலேசியா ஒரு தனித்துவமான நாடு, சுதந்திரத்திற்குப் பின்னர் அதன் தலைவர்களின் பெரும் சமநிலைச் செயல்பாடுகளின் காரணமாக பல  இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடும்போது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுள்ள நாடாக உள்ளது. நாட்டின் உச்ச சட்டங்கள் மதச்சார்பற்றவை மற்றும் அனைவருக்கும் பொதுவான நன்மையை  உறுதிப்படுத்தக்கூடியவை. "மலேசியர்கள் ஜாகிர் நாயக் என்ற மனிதரால் பிளவுபட வேண்டுமா? என கேட்டு உள்ளார்.

Next Story