58 நாடுகள் ஆதரவு என தெரிவித்து ட்விட்டரில் கேலி, கிண்டல்களுக்கு ஆளான இம்ரான் கான்


58 நாடுகள் ஆதரவு என தெரிவித்து ட்விட்டரில் கேலி, கிண்டல்களுக்கு ஆளான இம்ரான் கான்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:41 AM GMT (Updated: 13 Sep 2019 10:41 AM GMT)

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன என தெரிவித்துள்ள இம்ரான் கான் ட்விட்டரில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி உள்ளார்.

ஜெனீவா,

ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான்  ஒரு "கூட்டு அறிக்கையை" சமர்ப்பித்துள்ளது, இதில் சுமார் 60 நாடுகள் ஆதரிப்பதாக  கூறி உள்ளது. ஆனால் பகிரங்கமாக அடையாளம் காட்டவில்லை.

இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதை ஆதரிக்கும் நாடுகளை அடையாளம் காட்டவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை எதிர்க்கும் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை அந்த அமைப்பிலுள்ள 60 நாடுகள் ஆதரித்ததாக விவரம் அறியாமல் குறிப்பிட்டதன் மூலம் பாகிஸ்தான் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து ட்விட்டரில் இம்ரான்கான் வெளியிட்டுள்ள பதிவுகளில், "ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை இந்தியா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், அங்குள்ள இந்தியாவின் முற்றுகை மற்றும்  கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன" என குறிப்பிட்டுள்ளார். 

இந்த அறிக்கையில் 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் பாகிஸ்தானின்  நட்பு நாடான சீனாவின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

2019-2021 அமர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவை பின்வரும் 47 நாடுகள் ஆகும். 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில்  உள்ள நாடுகள் விவரம் வருமாறு:-

ஆப்பிரிக்க நாடுகள்: 13 
ஆசியா-பசிபிக் நாடுகள்: 13 
லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள்: 8
மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள்: 7
கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: 6 .
மொத்தம் -47

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்துள்ள பதிலில், ஐ.நா.  மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 47 நாடுகள்தான் உறுப்பினர்களாக இருப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானோ 60 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது என்று கூறினார். ஆதலால் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளின் பெயர்களை அந்நாடு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இம்ரான் கானின் பதிவை டுவிட்டரில் உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து கேலி கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Next Story