ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி


ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Oct 2019 7:56 PM GMT (Updated: 10 Oct 2019 7:56 PM GMT)

ஜெர்மனியின் ஹாலே நகரில் யூத வழிபாட்டு தலம் ருகே துப்பாக்கிச்சூடு நடந்தது.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹாலே நகரில் யூதர்களின் வழிபாட்டு தலமான ஜெப ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் யூதர்களின் புனித நாளான ‘யோம் கிப்பூர்’ அனுசரிக்கப்பட்டதையொட்டி இந்த ஜெப ஆலயத்தில் ஏராளமான யூதர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெப ஆலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றார். ஆனால் ஜெப ஆலயத்தின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. எந்திர துப்பாக்கியால் கதவில் சுட்டபோதும், அது திறக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர் ஜெப ஆலயத்தையொட்டி உள்ள வீதிக்குள் நுழைந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

முன்னதாக அவர் கேமரா பொருத்தப்பட்ட தலைக்கவசத்தை தலையில் அணிந்துகொண்டு அதன் மூலம் தாக்குதல் காட்சிகளை படம் பிடித்து இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார். இதற்கிடையில் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பி ஓடிய நபரை தேடினர்.

இறுதியில் ஹாலே நகரின் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடாத போலீசார் அவர் ஜெர்மனியை சேர்ந்த 27 வயது வாலிபர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Next Story