ஹாங்காங்கில் போராட்டக்குழு தலைவர் மீது சுத்தியல் தாக்குதல்


ஹாங்காங்கில் போராட்டக்குழு தலைவர் மீது சுத்தியல் தாக்குதல்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:45 PM GMT (Updated: 17 Oct 2019 8:40 PM GMT)

ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் கோரி கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தை பல்வேறு ஜனநாயக உரிமை குழுக்கள் தலைமை தாங்கி நடத்தி வருகின்றன. அவற்றில் ஒன்றான ‘சிவில் மனித உரிமைகள் முன்னணி’ என்ற குழுவின் தலைவர் ஜிம்மி ஷாம்.

ஹாங்காங், 

போராட்டக்குழுவின் தலைவர்களில் முக்கிய நபராக பார்க்கப்படும் இவர், நேற்று முன்தினம் மாலை ஹாங்காங் மோங் கோக் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கைகளில் சுத்தியல்களுடன் வந்த 5 பேர் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில் அவரது மண்டை உடைத்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் அந்த கும்பல் சற்றும் ஈவுஇரக்கமின்றி அவரை மேலும் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து கிடந்த ஜிம்மி ஷாமை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பிறகு தான் நலமாக இருப்பதாகவும், இந்த தாக்குதல் தன்னை போராட்டக்காரர்களுடன் இன்னும் அதிகமாக இணைக்க உதவி இருப்பதாகவும் ஜிம்மி ஷாம் ‘பேஸ்புக்’கில் பதிவிட்டுள்ளார். மேலும், விரைவாக செயல்பட்டு தன்னை காப்பாற்றிய போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நிர்வாக தலைவர் கேரி லாம் வருடாந்திர உரையை நிகழ்த்த முடியாமல் வெளியேறிய சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story