இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு ‘திடீர்’ தேர்தல்: டிசம்பர் 12-ந் தேதி நடக்கிறது


இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு ‘திடீர்’ தேர்தல்: டிசம்பர் 12-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 30 Oct 2019 11:16 PM GMT (Updated: 30 Oct 2019 11:16 PM GMT)

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 12-ந் தேதி ‘திடீர்’ தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக கட்சிகள் முழு வீச்சில் வரிந்து கட்டுகின்றன.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை செய்து முடிப்பதில் இழுபறி ஏற்பட்டது. அக்டோபர் 31-ந் தேதிக்குள் (இன்றைக்குள்) ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றம், இதை ஒப்புக்கொள்ளவில்லை. கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டது.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், சாக்கடை குழியில் விழுந்து சாவேன் என்று சொன்ன பிரதமர் போரிஸ் ஜான்சன், கடைசியில் இறங்கி வந்தார்.

இதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு, இந்த கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தி மக்களின் ஆதரவை பெற தீர்மானித்தார். ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகாது என்ற வாக்குறுதியை பிரதமர் அளிக்கிறபோது, திடீர் தேர்தலை ஆதரிக்க தயார் என எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின் அறிவித்தார்.

இதையடுத்து டிசம்பர் 12-ந் தேதி ‘திடீர்’ தேர்தல் நடத்துவதற்கான மசோதா, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்கள் சபையில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் மசோதாவுக்கு ஆதரவாக 438 எம்.பி.க்களும், எதிராக 20 எம்.பி.க்களும் ஓட்டு போட்டனர். பெருவாரியான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், அது நிறைவேறியது.

எதிர்க்கட்சியான தொழிற் கட்சி, நாடாளுமன்ற தேர்தலை டிசம்பர் 12-ந் தேதிக்கு பதிலாக 9-ந் தேதி நடத்த வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம், மக்கள் சபையில் நிராகரிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து டிசம்பர் 12-ந் தேதி தேர்தல் என்பது உறுதியாகி விட்டது.

அங்கு 1923-ம் ஆண்டுக்கு பிறகு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. அது மட்டுமின்றி 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி கடைசியாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. எனவே 2½ ஆண்டுகளில் நாடாளுமன்றம் மறு தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றாக வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்குகிறார். இதுபற்றி கருத்து தெரிவித்த அவர், “ஒரு கடினமான தேர்தலை சந்திக்க நான் தயாராகி விட்டேன்” என்று கூறினார். மேலும், “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் மக்களின் உத்தரவை தேர்தல் பெற்றுத்தரும்” என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார். கன்சர்வேடிவ் கட்சி முழு முனைப்புடன் தேர்தல் களத்தில் குதிக்கிறது.

எதிர்க்கட்சியான தொழிற் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியை சந்திக்க தயாராகிறது.

இதுபற்றி அந்த கட்சித்தலைவர் ஜெரேமி கார்பின் கூறும்போது, “திடீர் தேர்தல், நாட்டை மாற்றுவதற்கு ஒரு தலைமுறையில் கிடைத்துள்ள வாய்ப்பு” என்று குறிப்பிட்டார்.


Next Story