திருக்குறள் தாய்லாந்து மக்களுக்கு வழிகாட்டியாக அமையும் - பிரதமர் மோடி பேச்சு


திருக்குறள் தாய்லாந்து மக்களுக்கு வழிகாட்டியாக அமையும் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2019 8:26 AM GMT (Updated: 3 Nov 2019 8:26 AM GMT)

திருக்குறளின் மொழி பெயர்ப்பு தாய்லாந்து மக்கள் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துவதற்கு வழிகாட்டியாக அமையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதைப்போல கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று பாங்காக் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்தியர்களும் கலந்து கொண்டு பிரதமரை அன்போடு வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். 

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியின்போது தாய்லாந்து (தாய்) மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

இந்நிலையில், இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரையை பிரதமர் மோடி தமிழில் ‘வணக்கம்’ கூறி தொடங்கினார்.

அப்போது அங்கு உரையாற்றிய மோடி ‘தமிழ் மொழியின் மிகச் சிறந்த நூலான திருக்குறளின் மொழி பெயர்ப்பு தாய்லாந்து மக்கள் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துவதற்கு வழிகாட்டியாக அமையும்’ என்றார்.

மேலும் இல்லறவியலில் 212 -வது அதிகார பாடலான ‘தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு’

என்ற குறளையும் வாசித்து அதற்கான அர்த்தத்தையும் கூறினார்.

அதாவது ஒவ்வொருவரும் இடைவிடாமல் முயற்சி செய்து தங்கள் திறமைக்கு ஏற்ப பொருளீட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டிய
பொருளெல்லாம் தகுதி படைத்த மக்களுக்கு அதாவது உழைக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உதவுவதாக இருக்க
வேண்டும்.

இந்தியர்களின் வாழ்க்கை முறை இவ்வாறு தான் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

உலக தலைவர்கள் ஒன்று கூடிய ஐ.நா.சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலை மேற்கோள் காட்டியதோடு உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்று உலக நாடுகள் மத்தியில் பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story