‘சர்வதேச வளரும் நட்சத்திரம்’ - அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 2-வது விருது


‘சர்வதேச வளரும் நட்சத்திரம்’ - அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 2-வது விருது
x
தினத்தந்தி 11 Nov 2019 7:45 AM GMT (Updated: 11 Nov 2019 10:51 PM GMT)

அமெரிக்காவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா’ என்ற விருது வழங்கப்பட்டது.

சிகாகோ,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 9-ந் தேதி சிகாகோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சிகாகோ நகரத்தில் நடந்த விழாவில், அமெரிக்கா பல இன கூட்டமைப்பின் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா’ என்ற விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை பெற்றுக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஏதோ சாதித்து விட்டோம் என்ற நினைப்பில் இல்லாமல், மிகப்பெரிய பொறுப்பு, புதிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற உணர்வுடன் தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் இந்த விருதை ஏற்கிறேன்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த எதிர்பார்ப்பும், அன்பும் எனது பொறுப்பை இரட்டிப்பாக்கி இருக்கிறது. சாமானியனாக இருந்து துணை முதல்-அமைச்சர் ஆகியுள்ள நான், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டேனி கே டேவிஸ்சின் வாழ்க்கை சரித்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன்.

கீழ்மட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வியர்வை சிந்தி அவர் ஆற்றிய சமுதாயப் பணிகளும், அவர் சமூக உரிமைகளுக்காக நடத்திய மிக முக்கியமான போராட்டங்களும், தொடர் தேர்தல் வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுத்திருப்பதை காண்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருக்கும் ஒருவர் தொடர்ந்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு பொதுப்பணியாற்றுவது எத்தகையை சவால் நிறைந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன். சிகாகோ வாழ் தமிழ் சமுதாயத்திற்கும் எனது பாராட்டுகள். உங்களை எல்லாம் பார்த்து தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிகாகோவின் இந்தியாவிற்கான தூதர் சுதாகர் டாலேலா, அமெரிக்க பல இன கூட்டமைப்பின் ஆலோசனை பணிக்குழு தலைவர் சீனிவாச ரெட்டி, நிறுவன தலைவர் விஜய பிரபாகர், நடுவர் குழுவின் தலைவர் ஜெனோபி சோவெல், தமிழக நிதித்துறை செயலாளர் ச.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story