ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை இல்லை : அமெரிக்க அதிகாரி


ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை இல்லை : அமெரிக்க அதிகாரி
x
தினத்தந்தி 22 Nov 2019 11:17 AM GMT (Updated: 22 Nov 2019 12:00 PM GMT)

ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை பெறுவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்காது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நியூயார்க்

ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கு, அந்நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. 

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  மேலும் பொருளாதார தடை எச்சரிக்கை விடுத்தது. இதையும் மீறி  40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை, தங்கள் எதிர்ப்பை மீறி, இந்தியா பெறுவதற்காக, அதன்மீது, பொருளாதார தடை விதிக்கப்படாது எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாதபோது, அதுகுறித்த பேச்சிற்கு இடமில்லை என்றார்.

இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதில் எந்த தவறு இல்லை என்றாலும், ஒருபுறத்தில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு, மறுபுறத்தில் ரஷ்யா உளவு பார்க்கத்துடிக்கும் என்றும், எனவே, அதில், இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரி கூறியுள்ளார். எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ள துருக்கி விவகாரத்தில் இருந்து, இந்தியா முற்றிலும் மாறுபடுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்று, அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறி, ரஷ்ய நாட்டிடம் இருந்து, எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியது. இதனையடுத்து, துருக்கிக்கு வழங்கவிருந்த அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான, F-35 ரக போர் விமானத்தை வழங்க முடியாது என, அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story